நவம்பர் வரை காத்திருக்கச் சொன்ன முதல்வர்...போராட்டத்தில் உறுதியாக இருக்கும் ஜாக்டோ ஜியோ!
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
ஈரோடு: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் நடத்திய பேச்சுவதார்த்தையில் நவம்பர் இறுதி வரை காத்திருக்க கூறியுள்ளதையடுத்து, போராட்டத்தைத் தொடங்வது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7 முதல் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
கடந்த 4ம் தேதி தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும், ஜாக்டோ ஜியோ சார்பில் அதன் தலைமைக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஆனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
முதல்வருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஈரோட்டில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்
Recommended Video
காத்திருக்கச் சொன்ன முதல்வர்
ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 நிர்வாகிகளுடன் சுமார் 30 நிமிடங்கள் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் நவம்பர் இறுதி வரை பொறுத்திருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
ஆலோசித்து முடிவு
இதனையடுத்து போராட்டத்தை தொடர்வதாக வேண்டாமா என்று அனைத்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் இளங்கோவன் கூறியுள்ளார். எனவே அறிவித்தபடி நாளை முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
போராட்டத்தில் உறுதி
இதனையடுத்து போராட்டத்தை தொடர்வதா வேண்டாமா என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர். முடிவில் செப்டம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் திட்டமிட்டபடி 76 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.