பள்ளித் தேர்வு, சட்டசபைத் தேர்தல் எதிரொலி... ஜாக்டோ போராட்டம் தற்காலிக வாபஸ்
திருச்சி: தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஆசிரியர் அமைப்பு நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்த அமைப்பு அறிவித்திருந்தது. இருப்பினும் சட்டசபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருச்சியில் நடந்த அமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் மாவட்ட அளவில் பேரணி, அடையாள உண்ணாவிரதம், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள்
நடத்தப்பட்டன.
இதையடுத்து பிப்ரவரி 9-ம் தேதி அன்று ஜாக்டோ அனைத்து சங்க பிரதிநிதிகளையும், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 10ம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது. இருப்பினும் ஜாக்டோ கோரிக்கைகள் தொடர்பாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியி டப்படலாம் என்பதால் அதுவரை காத்திருக்க முடிவுசெய்தனர். ஆனால், 16-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஜாக்டோ நிர்வாகிகள் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.
இதையடுத்து ஜாக்டோ பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டம் மீண்டும் வலுப் பெற்றது தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். மனிதச் சங்கிலி போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜாக்டோ தனது போராட்டத்தை 3 மாதகால அளவிற்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததாலும், மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக திருச்சியில் நடந்த ஜாக்டோ உயர்மட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.