ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டம்
ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுவிக்கப்பட்டவுடன் போராட்டத்தை தொடங்கினர்.
ஈரோடு: ஈரோட்டில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுவிக்கப்பட்டவுடன் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட அவர்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர்.