டோணிக்கு எதிராக கோஹ்லி கொந்தளிக்க.. ஜடேஜா அன் கோவே காரணம்?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் தவறாமல் இந்திய அணியில் இடம் பெறுகிறார்கள் என்ற எரிச்சலில் விராத் கோஹ்லி உள்ளாராம். இதுவே அவர் டோணிக்கு எதிராக செயல்பட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அணிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளதாம்.
எதற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு முண்டா தட்டும் கோஹ்லி தற்போது டோணியுடன் நேருக்கு நேர் மோதலில் குதித்துள்ளார். வங்கதேச தொடரில் இது பெரிதாக வெடித்துள்ளது. கோஹ்லி இரு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. அவரது ஆதரவு வீரர்களம் கூட கிட்டத்தட்ட ஸ்டிரைக் செய்வது போல ஆடி வருகின்றனர்.
டோணி தரப்பு இந்த கும்பலின் அக்கப்போரால் கடும் டென்ஷனாகியுள்ளதாம். இந்த விரக்தியில்தான் பதவியிலிருந்து விலக நான் தயார் என்று கூறி நீண்ட பேட்டி அளித்துள்ளார் டோணி.
ப்பூ.. வென ஊதித் துப்பி விடக் கூடிய அளவிலான வங்கதேச அணியை வீழ்த்த முடியாமல் போனதற்கு கோஹ்லி தரப்பே காரணம் என்பது டோணி தரப்பின் வருத்தமாகும். இது தனக்குக் கெட்டப் பெயரைத் தரும் என்பதால்தான் கோஹ்லி தரப்பு வெற்றிக்காகப் பாடுபடாமல் வேண்டும் என்றே சொதப்பலாக ஆடியது என்றும் டோணி தரப்பு குமுறுகிறது.
எப்போதும் நிதானமாக இருக்கும் டோணி, முதல் போட்டியின்போது வங்கதேச பவுலரை இடித்துத் தள்ளி கோபாவேசம் காட்டியதும் கூட கோஹ்லி தரப்பு ஏற்படுத்தி வரும் டென்ஷன் காரணமாகவே என்றும் கூறுகிறார்கள்.
இந்திய அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முக்கியக் கருவாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களான அஸ்வின், மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு டோணி தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார். குறிப்பாக சரியாக ஆடாவிட்டாலும் கூட ஜடேஜா கண்டிப்பாக அணியில் இடம் பெற்று விடுகிறார் என்பது கோஹ்லி தரப்பின் புலம்பலாம்.
ஆனால் எந்த வீரருக்கு வாய்ப்பு தருவது, யாரை விளையாட வைப்பது என்பது கேப்டனின் உரி்மை, அதில் யாரும் தலையிட முடியாது என்பது டோணி தரப்பு பதிலடியாக உள்ளது.
டோணியிடம் தற்போது ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 கேப்டன் பதவி மட்டுமே உள்ளது. அதிலிருந்தும் அவரைக் காலி செய்வது என்று கோஹ்லி தரப்பு கோபாவேசமாக செயல்பட்டு வருகிறதாம். அதன் ஒரு பகுதிதான் வங்கதேச டூரில் அவர்கள் சொதப்பலாக ஆடியது என்கிறார்கள்.