"புரட்சித் தலைவி" விரைவில் நலம் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 3 வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில், "புரட்சி தலைவி ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பொது மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார்.
முன்னதாக, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவர் குழுவிடம் விசாரித்து விட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து டெல்லியில், மத்திய அமைச்சர்களான, வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகிய தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றனர்.
Praying for the speedy recovery of Puratchi Talaivi J. Jayalalitha. May God allow her to be in service of the people at the earliest
— YS Jagan Mohan Reddy (@ysjagan) October 15, 2016
அதனைப் போன்றே கேரள மாநிலத்தில் இருந்து அதன் கவர்னர் சதாசிவம் மற்றும் முதல்வர் விஜயன் பினராய் ஆகியோர் அப்போலோ சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில், தற்போது ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன்மோகன் ஜெயலலிதா உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஜெயலலிதா நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவிக் கொண்டார்.