கைதிக்கு செல்போன், சார்ஜர் சப்ளை.. வேலூர் சிறை வார்டன் அதிரடி சஸ்பெண்ட்
வேலூர் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன் கொடுத்து உதவிய சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி முகமது அனீபா உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்: வேலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிக்கு செல்ஃபோன் கொடுத்து உதவிய சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காட்பாடியில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சரவணன் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் சரவணன் செல்போனில் பேசி வருவது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 12ம் தேதி திருவலத்தில் உள்ள சரவணின் வீட்டிற்கு சென்று காட்பாடி இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணன் தனது மனைவி ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிவருவது தெரியவந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாண்டி, சிறைத்துறை டிஐஜி மற்றும் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறைக்காவலர்கள் நேற்று முன்தினம் சரவணனிடம் சோதனை நடத்தினர். அப்போது அவன் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்கள், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றி விசாரணை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், தலைமை வார்டன் குமரவேல், இந்த செல்ஃபோன், சார்ஜர் கொடுத்ததாக கண்டறிந்தனர். இதையடுத்து, துறை ரீதியான விசாரணை குமரவேலிடம் நடத்தப்பட்டது. இதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஐஜி முகமது அனீபா உத்தரவிட்டார்.