தலைமைச் செயலகத்தில் ஜெ.வைச் சந்தித்தார் ஜேட்லி- தமிழக வெள்ள சேதம் குறித்து ஆலோசனை
சென்னை: தமிழக வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இம்மாதம் 1ம் மற்றும் 2ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஆனாலும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் இன்னும் கூட வடியாமல் உள்ளது.
வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வட தமிழகப் பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
இந்நிலையில், தற்போது தமிழக வெள்ள சேதத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை வந்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி.
முன்னதாக வெள்ள நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் வெள்ள சேத விபரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.