சென்னை ஜல்லிக்கட்டில் கமர்ஷியல் நெடி... கார்ப்பரேட்டுகளின் தலையீட்டுக்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!
சென்னையில் நடத்தப்படூம் ஜல்லிக்கட்டு வணிக ரீதியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் நிறுத்தி நடத்துவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை : சென்னை கோவளத்தில் ஜனவரி 18ல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடு என்றும், இது நடந்தால் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பீட்டாவால் ஆபத்து வந்து விடும் என்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரம்பரிய முறைப்படியே ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்றும் கமர்ஷியல் நோக்கத்தில் நடத்தப்பட்டால் அதனை எதிர்ப்போம் என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசியதாவது : சென்னையில் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கனவு, ஆனால் அது இப்போது தவறான விஷயமாக மாறியுள்ளது. ஏனெனில் சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் இந்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. அடுத்ததாக 13 வருடமாக ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகிறோம், கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை மீட்கத் தான் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தோம்.
ஜல்லிக்கட்டை வைத்து காசு வசூலிப்பதாகவும், நிறைய பணம் சம்பாதிப்பதாகவும் தான் பீட்டாவின் குற்றச்சாட்டு. அவர்கள் சொல்வதை செயல்படுத்துவது போலத் தான் இருக்கிறது. கோவில் சார்பிலும், திண்டுக்கல் தேவாலயம் சார்பிலும், சந்தனக்கூடு திருவிழாவிற்காகவும் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
ஸ்பான்சர்கள் ஏன்?
ஆனால் தற்போது பூர்விகா வழங்கும் ஜல்லிக்கட்டு, அணில் சேமியா வழங்கும் ஜல்லிக்கட்டு என்று புதிதாக கேள்விப் படுகிறோம். பீட்டாவின் நோக்கமே கார்ப்பரேட்டை புகுத்துவது தான். நாட்டு மாடுகளை அழித்து ஜெர்சி மாடுகளை புகுத்தினார்கள், அதன் மூல்ம் சர்க்கரை வியாதி வந்து நாம் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தேடிச் செல்ல நேரிட்டது.
பெரிய நிறுவனங்கள் களமிறங்கும்
தற்போது எதிர்த்து நின்று போட்டியிட்டுப் பார்த்து முடியாது என்ற நிலையில் நம் தோளில் கைபோட்டு ஜல்லிக்கட்டு நடத்தத் தொடங்கிவிட்டனர். இன்று பூர்விகா ஜல்லிக்கட்டு நடத்தினால் நாளை பெப்சி, கோக் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு நடத்தும்.
தடைக்கு வாய்ப்பாகிவிடும்
கார்ப்பரேட்கள் ஒவ்வொருவரும் ஜல்லிக்கட்டு நடத்தினால் நிச்சயம் 10 நாட்களில் தடை வந்தவிடும். ஸ்பான்சர்கள் வைத்து ஜல்லிக்கட்டு நடத்தினால் நிச்சயம் பீட்டா இதையே சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிவிடும்.
பண்பாட்டு ரீதியில்
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் அது பண்பாடு கலாச்சார ரீதியில் இருக்கலாமே தவிர, கார்ப்பரேட்களின் தலையீடு இருக்கக் கூடாது. மாடுகளை எப்படி தெய்வமாக வழிபட்டு வாடிவாசலில் திறந்துவிட வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டை சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. அதனை விடுத்து ஸ்பான்சர்களை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தினால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.