அலங்காநல்லூர் போர்க்களத்தின் அடுத்த கட்டம் என்ன? செய்தியாளர்களிடம் விவரிக்க இளைஞர்கள் திட்டம்!
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி அலங்காநல்லூரில் தொடரும் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் விவரிக்க உள்ளனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அலங்காநல்லூரில் விடிய விடிய இளைஞர்கள், கிராம பெண்கள் போராட்டத்தை தொடருகின்றனர். தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களிடம் விவரிக்க இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அலங்காநல்லூரில் தன்னெழுச்சியாக திரண்ட 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய வாடிவாசல் அருகே அமைதிவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எந்த ஒரு முழக்கங்கள் எதுவும் இல்லாமல் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர் இளைஞர்கள்.
இந்த இளைஞர்கள் யார் தலைமையிலும் ஒன்று திரளாமல் தன்னெழுச்சியாக திரண்டவர்கள். ஆகையால் ஒவ்வொருவரும் ஊடகங்களில் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இதையடுத்து கிராம மக்கள் அனைவருடனும் போராட்டத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள் விடிய விடிய ஆலோசனை நடத்தி சில முடிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் தொடருமா? அடுத்த கட்டம் என்ன? என்பதை செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் செய்தியாளர்களிடம் போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்கள் விவரிக்க உள்ளனர்.