காளைகளை திருப்பியனுப்பிய அலங்காநல்லூர் மக்கள்.. நிரந்தர சட்டம் கேட்டு கோஷம்! ஜல்லிக்கட்டு நடக்குமா?
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கேட்டு போராட்டம் நடத்திவரும் அலங்காநல்லூர் பொதுமக்கள், தங்கள் ஊருக்கு வந்த ஜல்லிக்கட்டு காளைகளை திருப்பியனுப்பியுள்ளனர்.
அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் வேண்டும் என்பது அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கை. ஆனால் அவசர சட்டம் உதவியோடு நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து ஆயத்த பணிகளை நடத்தி வருகிறது. இதற்காக வாகனங்களில் காளைகள் அலங்காநல்லூர் கொண்டு வரப்பட்டன.
ஆனால் ஊர் எல்லையில் திரண்ட பொதுமக்கள், வாகனங்களை மறித்து காளைகளை திருப்பியனுப்பி விட்டனர். இதனால் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே ஜல்லிக்கட்டை தொடக்கி வைக்க இன்று இரவு மதுரை வந்து சேர்ந்தார் முதல்வர் பன்னீர் செல்வம். அவர் தங்கியுள்ள பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பன்னீர் செல்வத்தை ஊருக்குள் விடுவதில்லை என்று அலங்காநல்லூர் மக்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் ஆவேசமாக கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.