ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுப்பெறும்.. நடிகர் பார்த்திபன்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடையும் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் பங்கேற்பேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரினர்.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது தெரிவித்தனர். இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரங்களில் ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி இருக்கும் பட்சத்தில் அதை முறியடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுவடையும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் நான் பங்கேற்பேன்.
மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நியாயமானது என்று கூறிய பார்த்திபன், மக்கள் மன்றத்தின் சக்தி என்பது நீதிமன்ற தீர்ப்பை விட வலிமையானது என்றும் தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.