1000க்கும் மேற்பட்ட வீரர்கள்.. 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு.. களைகட்டிய அவனியாபுரம்!
அவனியாபுரத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை: அவனியாபுரத்ததில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு அங்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டம் இயற்றியது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடை தகர்க்கப்பட்டதையடுத்து அலங்காநல்லூர் அவனியாபுரம், பாலமேடு ஆகியப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த நாள் குறிக்கப்பட்டது. 5ஆம் தேதியான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வரலாறு காணாத பாதுகாப்பு
இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான காளைகளை ஏறுதழுவ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிட்டு அப்பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
500 போலீசார் குவிப்பு
ஜல்லிக்கட்டுப்போட்டிகளை முன்னிட்டு அவனியாபுரம் பகுதியில் 500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தயார் நிலையில் மருத்துவக்குழு
காயமடையும் மாடுபிடி வீரர்கள் மற்றும காளைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. வீரர்களுக்காக 8 ஆம்புலன்சுகளும் காளைகளுக்காக 2 ஆம்புலன்ஸ்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் விடுமுறை
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் வாடிவாசல் அருகே பொதுமக்கள் பாதுகாப்புக்காக தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குப பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கண்டுகளித்து வருகின்றனர்.