பரமபதம் ஆட்டம் ஆடும் ஜல்லிக்கட்டு... 2006ல் ஆரம்பித்த மல்லுக்கட்டு கடந்து வந்த பார்வை
சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய மாடுபிடி விளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற, மத்திய அரசு, அனுமதித்து இருக்கிறது. ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதைவிட கஷ்டமான காரியமாகியுள்ளது, இதற்கான அனுமதியை போராடி பெறுவதற்கு.
ஏன் இந்த பரபரப்பு, எதற்காக இந்த எதிர்ப்புகள் என்பதையெல்லாம், அறிய சற்று பின்னோக்கி பார்க்கலாம்:
*தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரைமுறைகளை நிர்ணயிக்க 2007ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
"2008ம் ஆண்டு, விலங்கு ஆர்வலரும், தற்போதைய மத்திய அமைச்சருமான, மேனகா காந்தி வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.
*2009ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு அளித்த உறுதிமொழி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டது.
*இதன்பிறகும் வழக்கு தொடரப்பட்டதால், மைதான தடுப்புகளின் உயரத்தை உயர்த்துவது உள்பட பல நிபந்தனைகளை விதித்து, புதிய வரைமுறைகளை மார்ச் 2011ல் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
*விலங்குகளை மையமாக வைத்து நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை கேட்டு 2011ம் ஆண்டு ஏப்ரலில், மீண்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
*மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், வித்தைக் காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து, 2011ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கை பிறப்பித்தார்.
*இதனால், காளை மாடுகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்த தடை உருவானது. போட்டி ஏற்பாட்டாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகவே, மதுரை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதியளித்தது.
*இதைத் தொடர்ந்து, 2012ம் ஆண்டு டிசம்பரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. 2013ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2012ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது.
*ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை எனவும், இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கடந்த 2013 ஜனவரியில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இறுதியாக, ஜல்லிக்கட்டு நடத்த தடை கேட்டு விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2014 பிப்ரவரி மாதம் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு தீர்ப்புக்கு வரும் நேரத்தில், மூன்று ஆண்டுகள் கழித்து, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, 2011ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக கூறியதை, உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த வழக்கில்தான், 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அன்று, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த, நிரந்தர தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.