முந்தைய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட உங்களுக்கு ஓட்டு போடவில்லை.. வாசகரின் ஆதங்கம்
முந்தைய அரசுகள் செய்த தவறுகளை குறைகளை சுட்டிக்காட்ட மக்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என நமது வாசகர் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விஷயத்தில் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்கள் முந்தைய அரசுகளை குற்றம்சாட்டி காலம் கடத்துவதை நமது வாசகர் ஒருவர் ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
என்.குருமூர்த்தி எனும் வாசகர் பகிர்ந்து கொண்ட தகவல் இதுதான்: தமிழகம் முழுவதும் வறட்சியால்,வறுமையால்,உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயிகள் தினம் தினம் சாகிறார்கள். அதை தடுக்க இயலாத, மத்திய, மாநில அரசாங்கம், விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டை தடுக்கிறதாம் (காளையை காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்த்தது). விலை மதிப்பற்ற மனித உயிர் மீதே அக்கறையில்லாதவர்கள் விலங்குகள் மீது இவ்வளவு அக்கறையோடு செயல்பட காரணம் என்ன?
சுயமாக எது நல்லது எது கெட்டது என்று யோசிக்க தெரியாதவர்களா இவ்வளவு பெரிய நாட்டை வழி நடத்துவது. நாட்டில் தடுக்க வேண்டிய, காக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆயிரம் ஆயிரம் உள்ளது, ஆனால் அதை விடுத்து காக்க படவேண்டிய தமிழர் பாரம்பரியங்களை தடுக்க நினைக்கிறது அரசாங்கம்.
முந்தைய அரசுகள் செய்த தவறுகளை குறைகளை சுட்டிக்காட்ட மக்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. முந்தைய அரசுகள் செய்த தவறுகளை குறைகளை அவர்களை போலவே நீங்களும் செய்யக்கூடாது என்பதற்காக தான் உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் தவறு செய்திருந்தால் (காளையை காட்சி பட்டியலில் வைத்திருப்பது) அதை சரி செய்யவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு (சட்டத் திருத்தம்) என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மக்கள் தந்த அதிகாரத்தையே வைத்து கொண்டு மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு நல்ல விஷயங்கள் நடைபெற தடையாக இருக்காதீர்கள்.
தடையில்லாமல் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க செய்வது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமையே தவிர மக்களை எதுவுமே செய்யவிடாமல் தடுப்பது அல்ல. இதையெல்லாம் பார்க்கும் பொழுது அன்று வெள்ளையர்கள் நாட்டிற்கு மட்டும் தான் சுதந்திரம் தந்திருக்கிறார்கள் இன்றளவும் நாமெல்லாம் (அரசாங்கம்) சுதந்திரமாக சுயமாக செயல்படமுடியாமல் அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக இருக்கிறோம் என்பது தெரிகிறது.
ஜாதி ,மதம் , இனம் , மொழி, இவைகளையெல்லாம் கடந்து மக்களின் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.இதற்கு பிறகாவது மக்கள் இதை உணர்ந்தால் மட்டுமே இந்திய மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும்.இல்லை என்றால் அரசியல் கட்சியில் இருப்பவர்கள் போல, நாமும் நம் தலைமுறையும் அடிமைகளாக இருக்கவேண்டும் அப்படி இருக்க வேண்டுமா ?
-என்.குருமூர்த்தி