ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் - காளைகளுடன் சென்று மனு அளித்த மாடுபிடி வீரர்கள்!
திண்டுக்கல்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்குமாறு காளைகளுடன் சென்று மனு அளித்த மாடுபிடி வீரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, அய்யம்பாளையம், வத்தலகுண்டு, நெல்லூர் உள்பட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த காளைகளை ஆண்டுதோறும் மதுரை அலங்காநல்லூர் மற்றும் நெல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வார்கள். கடந்த ஆண்டு ஜல்லிகட்டுக்கு தடைவிதித்தனர். இந்த நிலையில் காளைகளை வளர்ப்பவர்கள், "தமிழர்களின் வீர விளையாட்டு இது. மிருகவதை சட்டம் இதற்கு ஒத்து வராது. இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும்.
உடனடியாக மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை நடத்த முன்வரவேண்டும்" என்று பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முத்தையா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், காளைகளை வளர்ப்பவர்கள் இன்று நிலக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நாங்களே நடத்துவோம் என்றனர்.