மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் - ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது
மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்திய ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் ஈடுபட்டனர்.
நெரிசல் மிகுந்த மாம்பலம் ரயில் நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்து வகையில் பலத்த ஆர்பாட்டத்துடன் சென்றனர். ஒருவழியாக மாம்பலம் ரயில் சென்ற ஸ்டாலின், மின்சார ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார். பின்னர் போலீசார் அவரையும், திமுகவினரையும் கைது செய்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ராஜ்யசபா எம்.பி கனிமொழி திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பம் முதலே திமுக போராடி வருவதாக குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக மக்களை ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து தயாநிதிமாறன், கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே என்று கூறி ஒருவர் பேசியது திமுகவினருக்கே சிரிப்பை வரவழைத்திருக்கும். இதேபோல சைதாப்பேட்டையில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியின் தலைமையில் ஏராளமான திமுகவினர் ஈடுபட்டனர். திமுகவினர் மத்தியில் பேசிய துரைமுருகன், அதிமுக ஆளும் தகுதியை இழந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
திருச்சியில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய கே.என். நேரு உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆங்காங்கே போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மிகவும் அமைதியாக அறவழியில் ஆர்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அரசியல்வாதிகளின் இந்த திடீர் ஆர்பாட்டம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.