அலங்காநல்லூரில் 144 தடை உத்தரவா? - இல்லை என்கிறார் மதுரை மாவட்ட எஸ்.பி.,
மதுரை அவனியாபுரம், அலங்கநல்லூர் மற்றும் பாலமேடு வாடிவாசல் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பதற்றம் அதிகரித்தது. மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி இதனை மறுத்துள்ளார்.
மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து,கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, அப்பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
போலீஸ் குவிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிவாசல்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாலமேட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
மதுரையில் இன்று தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்கிடையில், ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று சில அரசியல் தலைவர்களும், அப்பகுதி மக்களும் கூறியுள்ளதால், தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
144 தடை உத்தரவா?
தற்போது ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவதால், இந்த ஆண்டு தடையை மீறி அலங்காநல்லூர்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவின.எனவே மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
எஸ்.பி. மறுப்பு
ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மதுரை எஸ்.பி விஜேந்திர பிதாரி,மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிருப்தியில் மக்கள்
ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்கும் பகுதிகளுக்குச் செல்லும் போலீசார், மக்களை மிரட்டி வருகிறார்கள். வாகங்களில் மாடுகளை ஏற்றவோ, சாலைகளில் மாடுகளை பத்திக்கொண்டு போவதற்கோ கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
வாடிவாசல் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. வாடிவாசல் மற்றும் மந்தை திடல் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் போலீசார் கேமராக்களை பொருத்தி வருகின்றனர். எப்பாடு பட்டாவது ஜல்லிக்கட்டு நடக்கும் என்று சொன்ன முதல்வர் இப்போது எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.