ஜல்லிக்கட்டு தடையை நீக்கு - விழுப்புரம், கடலூரில் இளைஞர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, ஃபீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னை தொடங்கி குமரி வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. விழுப்புரம் ஆட்சியர் அலுவலத்தின் முன்பு குவிந்த 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முழக்கமிட்டனர்.
கடலூரிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி வந்த அவர்கள், தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரி காளைகளுடன் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது பீட்டா அமைப்புக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது காளையை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
தேனியில் ஜல்லிக்கட்டு நடத்த முறையான சட்டத்திருத்த மசோதா இயற்றக்கோரி தமிழக பண்பாடு கலாச்சார மீட்புக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான இளைஞர்கள் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.