ஜல்லிக்கட்டு.. தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தஞ்சை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கைவிடுத்தும், அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மாநில அரசு, போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவியதை கண்டித்தும், சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதேபோல மதுரை ஒத்தக்கடையில் இளைஞர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வி.ஓ.சி பூங்கா பகுதியில் இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிசியா மைதானத்திலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
கோவையில் செவிலியர் சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். பெண் செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.