திண்டுக்கல் கோவில்பட்டியில் மக்கள் விரட்டியடித்தும் ஜல்லிக்கட்டை நடத்த மல்லுக்கட்டும் அதிகாரிகள்
திண்டுக்கல்: நத்தம் அருகே கோவில்பட்டியில் மக்கள் கொந்தளித்து விரட்டும்போதிலும் ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்து வருகிறார்கள் அரசு அதிகாரிகள்.
தமிழக அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்த போட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது. மக்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அலங்காநல்லூர் வருவதை தடுத்து சாலைகளில் குழி தோண்டி வைத்துள்ளனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த அரசு திட்டமிட்டது. அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாடிவாசலை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அரசு அதிகாரிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இருப்பினும் எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்திவிட அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.