'ஜல்லிக்கட்டுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் சாகித்ய அகாடமி விருதை திருப்பித் தருவேன்!'
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்றைக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், சாகித்ய அகாடமி தனக்கு அளித்த விருதினை திருப்பித் தரப் போவதாக எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் அறிவ்த்துளார்.
2016-ம் ஆண்டில் தனது 'கானகன்' நாவலுக்காக சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதைப் பெற்றவர் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார். ஜல்லிக்கட்டுக்கு நிலவிவரும் தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், 'இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக சாதகமான முடிவு வராத நிலையில், சாகித்ய அகாடமி அளித்த விருதை திருப்பி கொடுத்துவிடுவேன்' என்று கூறியுள்ளார்.
அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், 'ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், AWBI மற்றும் பீட்டாவைத் தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டுமென்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த பெருந்திரளான சமூக எழுச்சியில், கூட்டத்தில் ஒருவனாகவே என்னையும் உணர்கிறேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலைக்குள் இணக்கமான எமக்கு சாதகமான ஒரு பதில் கிடைக்காத பட்சத்தில் சாகித்ய அகாடமியிலிருந்து வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை நாளை காலை பதினோறு மணிக்கு சென்னையில் இருக்கும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் திரும்பத் தந்துவிடுவேன். இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. அது வெற்றிகரமாக நடக்கட்டும்," என்று பதிவிட்டிருக்கிறார்.