பள்ளிவாசல் முன் பெண் போராட்டம்: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் திருமணம் நிறுத்தம்
பள்ளிவாசல் முன்பு அமர்ந்து கொண்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகனுக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
காரைக்குடி: பள்ளிவாசல் மீது பாதிக்கப்பட்ட பெண் போராட்டம் நடத்தியதால் அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை ஜமாத்தார் நிறுத்தி வைத்தனர்.
அதிமுக எம்பியாக இருப்பவர் அன்வர் ராஜா. இவரது மகன் நாசர் மீது சென்னையை சேர்ந்த ரொபினா கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீஸில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
அதில், நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 மாதம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் அந்த பெண் கூறினார்.
கொலை மிரட்டல்
தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தனது பணத்தை ஏமாற்றிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை நாசர் மார்ச் 25-ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால் நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஜமாத்தாரிடம் புகார்
இந்நிலையில் இன்று காரைக்குடி காலேஜ் பள்ளிவாசலில் நாசர் அலிக்கும் வேறு பெண்ணிற்கும் திருமணம் நடக்கவிருந்தது. அங்கு சென்ற ரொபினா, நாசர் அலி தன்னை ஏமாற்றியது குறித்து ஜமாத்தாரிடம் புகார் கூறினார்.
திருமணம் நிறுத்தி வைப்பு
இதையடுத்து சிறிது நேரம் சுவற்றில் முட்டி மோதிய அழுத ரொபினா, பள்ளிவாசல் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ரொபினாவின் புகாரை ஏற்ற ஜமாத்தார் நாசர் அலியின் திருமணத்தை நிறுத்தி வைத்தனர்.
சலசலப்பு ஏற்பட்டது
மேலும் காரைக்குடியில் எந்த பள்ளிவாசலிலும் நாசர் அலிக்கு திருமணம் நடத்துவதில்லை எனவும் முடிவு செய்துள்ளனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.