இளையராஜாவை விமர்சித்தது ஏன்? டுவிட்டரில் இருந்து விலகிய ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
சென்னை: இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகர். வெறியன் அல்ல என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
சுப்ரமணியபுரம் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் இளையராஜா குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கள் பலவும் இளையராஜாவை தாக்குவது போலவே இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் கோபமாகி அவரை கடுமையான வார்த்தைகளால் திட்ட தொடங்கினர். அவரும் பொறுமையாக பதில் அளிக்க ஒரு கட்டத்தில் டுவிட்டர் கணக்கையே டெலிட் செய்து விட்டாராம்.
பீப் பாடல் தொடர்பான கேள்வி கேட்ட டிவி நிருபரை இசையமைப்பாளர் இளையராஜா, கண்டித்தார். இதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ட்வீட் செய்தார்.
இதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த டுவீட்டைப் பிறகு நீக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
இப்போது தனது வலைத்தளத்தில், இளையராஜாவை விமரிசனம் செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார்.
முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)
எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகர்தான். வெறியன் அல்ல.
30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொது இடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துகூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.