இளையராஜா பற்றி அவதூறு... மன்னிப்புக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன்!
இசைஞானி இளையராஜா பற்றி தவறாகப் பேசியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
சமீபத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளையராஜாவிடம், ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் சம்பந்தமே இல்லாமல் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப, அதனால் கோபமடைந்த இளையராஜா, "எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறாய்.. உனக்கு அறிவிருக்கா?' என்று கேட்டார்.
இதற்கு இணைய வெளியில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். பெரும்பாலான மீடியாக்காரர்களும் கூட அந்த தொலைக்காட்சி நிருபரின் செயலைக் கண்டித்திருந்தனர். இடம் பொருள் தெரியாமல் கேள்வி கேட்டு இளையராஜா போன்ற மேதைகளை அவமதித்தது தவறு என்று கூறினர்.
ஆனால் சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இளையராஜா பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தனர். அவர்களில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்.
"ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ஒரு ட்விட்டும், அது தொடர்பாக ரசிகர்களுடன் எழுந்த மோதலில், மிகவும் கொச்சையாக இன்னொரு ட்விட்டும் போட்டார் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு தனது ட்வீட்டுகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில், 'நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன், வெறியன் அல்ல.. அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க முடியாது,' என்று கூறியிருந்தார்.
இதனால் அவருக்கும் இளையராஜா ரசிகர்களுக்கும் இணைய வெளியில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் அவர் இப்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் இளையராஜா ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அந்த அறிக்கை:
உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு,
சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால்தான் இந்த மன்னிப்பு அறிக்கை.
இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால்தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.
இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!
இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.