கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி ரயில் தடம் புரண்டு விபத்து.. ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
மயிலாடுதுறை: கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பயணிகள் உயிர் தப்பினர்.
ஜன் சதாப்தி விரைவு ரயில் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை ரயில்வே தடத்திற்கு மாறிய போது தண்டவாளத்தை விட்டு ரயில் என்ஜின் விலகியது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் எந்தவித அசம்பாவிதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை.
மதியம் 1.40 க்கு திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜன்சதாப்தி விரைவு ரயில், நான்காவது நடைமேடைக்கு மாறிய போது, ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் என்ற இடத்தில் தற்போது ரயில் நின்று கொண்டிருக்கிறது.
இந்த ரயிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கிறார்கள். தடம்புரண்டதற்கு காரணம் என்னவென்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், சிக்னல் விழுந்தும் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைக்காததே இந்த விபத்திற்கு காரணம் என அங்கிருந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜன் சதாப்தி விரைவு ரயில் சக்கரம் தடம் புரண்டதால், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.