கேஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்த மாதர் சங்கத்தினர் - வீடியோ
சமையல் கேஸ் மானியம் மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி: மத்திய அரசு கேஸ் மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் கேஸ் சிலிண்டருக்கு அளித்து வரும் மானியத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. தமிழ்நாடு தவிர பிற மாநில முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களையும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கட்டுப்படுத்தி வருகிறது. மேலும், சாமானிய மக்களுக்கு வழங்கும் எல்லா மானியங்களையும் ரத்து செய்ய பாஜக அரசு திட்டுமிட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்படி வாழ்வது என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் கேஸ் மானிய ரத்து அறிவிப்பைக் கண்டித்து புதுவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கூட்டமாக அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.