சென்னை மெட்ரோ ரயில் மேம்பாட்டு பணிக்கு ஜப்பான் ரூ.1080 கோடி கடன்
சென்னை: சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஜப்பான் 5 ஆயிரத்து 536 கோடி ரூபாய் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மேம்பாட்டு பணிக்காக ரூ. 1080 கோடியும், அகமதாபாத் மெட்ரோ திட்டத்துக்காக ரூ. 4456 கோடிரூபாயும் ஜப்பான் கடனுதவி அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, ஜப்பான் அதிகாரிகள் டெல்லியில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியா ஜப்பான் இடையே கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார ஒப்பதங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் இது மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இரு திட்டங்களுக்கு ஜப்பான் நிதி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இதற்கான ஒப்புதல் அறிவிக்கையை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் யுடாக கிகுடா வழங்கினார். இதை பொருளாதார விவகாரத் துறை இணைச் செயலாளர் செல்வகுமார் பெற்றுக் கொண்டார்.
இக்கடனில் ஆயிரத்து 80 கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4வது பிரிவுக்கும் 4 ஆயிரத்து 456 கோடி ரூபாய் அகமதாபாத் மெட்ரோவுக்கும் ஒதுக்கப்படும். இந்தியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக ஜப்பான் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து புனித தோமையார் மலை வரையும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இதில், மாநில அரசு ரூ.3,034 கோடி (20 சதவீதம்), மத்திய அரசு நிதி ரூ.2,920 கோடி (20 சதவீதம்), ஜப்பான் வங்கிக் கடன் ரூ.8,646 கோடி (60 சதவீதம்) ஆகும்.
மெட்ரோ ரயில் முதற்கட்டமாக ஆலந்தூர் - கோயம்பேடு இடையே பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.