நாங்குநேரி தொழில்நுட்ப மண்டலத்திற்கு வந்த ஜப்பான் முதலீட்டாளர்கள்
நெல்லை: நாங்குநேரியில் உள்ள பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஜப்பான் நாட்டின் முதலிட்டாளர்கள் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டததில் நாங்குநேரி சிறப்பு தொழில் நுட்ப மண்டலத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 1998ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக சுமார் 3500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் அப்போதைய தொழில் துறை அமைச்சர் முரசோலி மாறன் இப்பகுதியை தடையில்லா வர்த்தக மணடலமாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து மத்திய அரசு இதனை 31.3.2001ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் இணைந்து பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலமாக இதனை அறிவித்தது.
இங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு உற்பத்தி வரி, விற்பனை வரி, வருமான வரி உள்பட பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வரி அலுவலகமும் அங்கு செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஜப்பான் நாட்டின் முதலிட்டாளர்கள் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் குழுவின் தலைவர் ஹிரோயகி தக்கயமா கூறுகையில், இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. இந்த பகுதியில் செழுமையான மனித வளம் உள்ளது. மேலும் அருகில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் உற்பத்தி பொருட்களை வேறு நாடுகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல வசதியும் உள்ளது என்று அவர் கூறினார்.