தங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகை- வரலாறு காணாத விலை உயர்வு
கன்னியாகுமரி தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 5ஆயிரத்து 500 விற்பனை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி: மல்லிகைப் பூவின் வரத்து குறைவால் தோவாளை பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில்பூ சந்தைக்கு புகழ் பெற்ற இடமாக தோவாளை பூ சந்தை விளங்குகிறது. தோவாளை பூ சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டம், வெளிஊர் மற்றும் உள்ளூர்களில் இருந்தும் பல வகையான வாசனை பூக்களும், பல வண்ணங்களில் உள்ள பூக்களும் அதிகமாக வருவது வழக்கம்.
கடுமையான பனிபொழிவு காரணமாக மல்லிகை பூக்களின்உற்பத்தி மிகவும் குறைந்து தோவாளைக்கு பூவின் வரத்தும் மிகவும் குறைந்துள்ளது. மற்ற நாட்களில் மல்லிகை பூவின் வரத்தானது சுமார் 5 டன்னுக்கு மேலாக வரும், இதனை கேரளா, வெளியூர், வெளிநாடுக்கும், செண்டு கம்பேனிக்கும் அனுப்பிவந்தனர்.
கடந்த சில வாரங்களாக பனிபொழிவால் மல்லிகை பூவானது சுமார்1 டன்னுக்கும் குறைவாகத்தான் வருகின்றன. இந்நிலையில் பூக்களின் தேவை அதிகமாக உள்ளதாலும், உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலை அதிகரித்துள்ளது.
தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3700க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் முதலே மல்லிகைப் பூவின் விலை உயர்ந்துக்கொண்டே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தாலும், இன்னும் சில நாட்களில் 7 ஆயிரம் ரூபாய் வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதேபோன்று கனகாம்பரம், பிச்சி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிராம் தங்கத்தின் விலையே 2,800 ரூபாய்க்கு தான் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ மல்லிகைப் பூ 2 கிராம் தங்கத்தின் அளவிற்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.