தூத்துக்குடியில் விளைச்சல் அதிகரிப்பால் வரத்தும் அதிகரிப்பு- மல்லிகை பூ விலை சரிவு
கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ அதிகமாக வருவதால் விலை கணிசமாக குறைந்துள்ளது.
தூத்துக்குடி: கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில தேவை குறைந்துள்ளதால் பூ விலை கணிசமாக குறைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி, இடைசெவல், நாலாட்டின் புதூர், மந்திதோப்பு, காமநாயகன்பட்டி, சந்திரப்பட்டி, ஜமீன்தேர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்து வளர்த்து வருகின்றனர்.
தங்களது தோட்டத்தில் உள்ள கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மல்லிகை செடிகளை வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த பகுதி கிராமங்களில் மல்லிகை செடிகளில் பூக்கள் நன்றாக வளர்ந்துள்ளன. இந்த சீசனில் விளைச்சல் நன்றாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பூ விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து அதனை மொத்தமாக கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளது.
தற்போது பூ மாரக்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.100 வரை விலை போகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை போனது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமண சீசன் இல்லாததால் மல்லிகை பூக்களின் தேவை குறைந்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது.