மமகவில் தொடரும் மோதல்: கட்சியிலிருந்து ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றம் !!
சென்னை: ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவஹிருல்லா மற்றும் அஸ்லாம் பாஷா ஆகியோர் கட்சியின் விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு காலம் இன்னும் அதிகமாக இருப்பதால், கூட்டணி குறித்து அப்போதைய சூழலுக்கு ஏற்பட முடிவு செய்யப்படும். கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமை நிர்வாக குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுச்செயலாளர், பொருளாளர், மூத்த துணை பொதுச்செயலாளர், மாநில அமைப்பு செயலாளர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கும். கட்சியின் கோட்பாட்டை மீறி, சட்ட விரோதமாக செயல்பட்ட தலைவர் ஜவாஹிருல்லா, ஆம்பூர் எம்எல்ஏ அஸ்லம் பாஷா ஆகியோரை கடந்த மாதமே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை குழு நீக்கி விட்டது. இந்த முடிவுக்கு செயற்குழு முழுமையாக அங்கீகாரம் அளித்துள்ளது.
அரசியல் உரிமையை பாதுகாக்கவும், தமிழக வாழ்வாதார உரிமையை பாதுகாக்கவும் உருவான கட்சி இது. இந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜீரணிக்க முடியாத ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியின் அலுவலகத்தை சூறையாடியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நேற்று முன்தினம் இரவு எங்களது தலைமை நிலைய செயலாளரை இந்த கும்பல் தாக்கியுள்ளன.
இந்த கூட்டத்தில் 48 மாவட்ட செயலாளர்களில் 40 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவஹிருல்லா மற்றும் அஸ்லாம் பாஷா ஆகியோர் கட்சியின் விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை அறிந்த ஜவஹிருல்லா ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் தமிமுன் அன்சாரி தரப்பு ஆதரவாளர்கள் மற்றும் ஜவஹிருல்லா தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து பொதுக்குழு நடந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.