மக்களே, ஜவடேகர் சொல்றதைக் கேளுங்க.. அடுத்த வருஷம் கண்டிப்பா ஜல்லிக்கட்டு நடந்துருமாம்!
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்தாமல் விட மாட்டோம் என்று சொல்லிச் சொல்லியே மக்கள் மனதில் ஜல்லியடித்து ஏமாற்றி விட்ட பாஜக, தற்போது அடுத்த வருஷத்துக்குப் பிரச்சினையைக் கொண்டு போய் விட்டது. அதாவது அடுத்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அதுவும் மதுரையில் நின்று கொண்டு இதைக் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் எப்படி நடத்துவோம் என்பதை இந்த ஜவடேகர் விளக்கினால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை.
மதுரையில் செல்லூர் 60 அடி சாலையில் பாஜகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஜவடேகர் பேசினார். அவரது பேச்சிலிருந்து...
நாங்க பலமா இருக்கோம்
தமிழகத்தில் பாரதீய ஜனதா பலவீனம் என நினைக்கலாம். 1984-ம் ஆண்டு லோக்சபாவில் 2 உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று 282 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (ஆனால் தமிழகத்தில் என்னா இருக்குஜி?).
மோடி அலை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலைவீசிய நேரத்தில் தமிழகத்தில் 2 இடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. காரணம் தமிழக மக்கள் மனதிலேயே ஜெயலலிதா தான் இந்த நாட்டின் பிரதமர் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தியதால் இவ்வளவு இடத்தை பிடிக்க முடிந்தது. ஆனால் வருகிற சட்டசபைத் தேர்தல் அப்படிப்பட்ட நிலைக்கு போகாது
பண்பாட்டுத் தலைநகரில் நின்று கொண்டு
நான் தமிழகத்தின் பண்பாட்டு நகரமான மதுரையில் இருந்து எனது பிரசாரத்தை தொடங்குகிறேன். கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுகவுக்கு மாறி, மாறி வாக்களித்து வருகிறீர்கள். ஒருவர் மீது கோபம் வரும் போது மற்றொருவரை தேர்ந்தெடுக்கும் முறை நீடித்து வருகிறது. இனி இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது. காரணம் சீட்டு விளையாட்டில் 'ஏஸ்' நரேந்திர மோடி. அவர் இல்லாமல் இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியாது என்பதை நினைவு படுத்துகிறேன்
ஊழல்
ஊழலில் திமுக - அதிமுக சம அளவில் உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஊழல் நிறைந்ததாக இருந்தது. இன்று ஊழல் இல்லாத ஒரு நன்மதிப்பை இந்த அமைச்சம் பெற்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி எப்படி நடந்தது. இப்போது 2 ஆண்டுகளாக பாஜக ஆட்சி எப்படி நடக்கிறது. என்பது உங்களுக்கு தெரியும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆகாய ஊழலான 2ஜியும், தரையில் நடந்த ஊழலான காமன்வெல்த் ஊழலும், பாதாளத்தில் நடந்த ஊழலான நிலக்கரி ஊழல்களும் நடந்தது. பல லட்சம் கோடி ஊழல் நடந்தது.
எங்கே அந்த பல்பு
மின்சாரத்தை சிக்கனமாக்க எல்.இ.டி. பல்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும், சென்றடைய வேண்டும் என்பதற்காக ரூ. 400 ஆக இருந்தததை ரூ. 70 ஆக விலை குறைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இதில் கமிஷன் கிடைக்காது என எண்ணியதால் இதன் பலனை தமிழகம் பெறவில்லை. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். தமிழகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்றார் ஜவடேகர்.