நீட் தேர்வை புதைகுழிக்கு அனுப்பும் வரை போராடுவோம்- ஜவாஹிருல்லா
நீட் தேர்வை புதைகுழிக்கு அனுப்பும் வரை போராடுவோம் என்று மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திருச்சி: உச்சநீதிமன்றம் எத்தனை தடைகள் போட்டாலும் கவலையில்லை. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திருச்சியில் தடையை மீறி நீட் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஜவாஹிருல்லா, நீட் தேர்வினால் கிராம, ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.
இது சர்வதேச சதி என்றும், இதற்கு பாஜக, பினாமி அரசு ஒத்துப்போவதாக குற்றம் சாட்டினார் ஜவாஹிருல்லா. இது கல்வி புரட்சியல்ல. ஏழைகளை காவு வாங்கும் புரட்சி என்றும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவதாக கூறினார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெறும். உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும் நீட் தேர்வை புதைகுழிக்கு அனுப்பும் வரை போராடுவோம். இதற்காக எத்தனை நாட்கள் சிறையில் போட்டாலும் அஞ்சமாட்டோம் என்றும் கூறினார் ஜவாஹிருல்லா.
மேலும், இதுபோன்ற மக்களுக்குப் பாதிப்பில்லாத பொதுக்கூட்டங்களை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் ஜவாஹிருல்லா விளக்கினார்.