தமுமுக, மமக தலைவராக மீண்டும் ஜவாஹிருல்லா, பொதுச்செயலராக ஹைதர் அலி தேர்வாகின்றனர்
சென்னை: த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வின் ஒருங்கிணைந்த செயற்குழு இன்றும், பொதுக்குழு நாளையும் சென்னையில் நடைபெறுகிறது. தலைவர், பொதுச்செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறப்படவிருக்கிறது.
த.மு.மு.க., ம.ம.க. இரண்டுக்கும் தலைவராக மீண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். த.மு.மு.க.வின் பொதுச்செயலாளராக ஹைதர் அலி தேர்வாகிறார்.
கடந்த 6 ஆண்டுகாலமாக எந்த பதவியுமில்லாமல் மூத்த தலைவர் என்ற அந்தஸ்த்தில் மட்டுமே இருந்த ஹைதர், இந்த முறை தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய இரண்டு பதவிக்கும் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைவர் பதவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதால் தலைவர் பதவிக்கான மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் ஹைதர். அதே போல, பொதுச்செயலாளர் பதவிக்கு ஹைதரை எதிர்த்து, சிலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ஜவாஹிருல்லாவுக்காக தலைவர் பதவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடிவு செய்ததுபோல, பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹைதர் தரப்பினர் முன்வைத்திருக்கிறார்கள். இதில் சிலபல விவாதங்கள் எதிரொலித்தன.
இறுதியில் பொதுச்செயலாளர் ஹைதர் அலியையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது. ஆக, தலைவராக ஜவாஹிருல்லாவும், பொதுச்செயலராக ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.