டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு மெடிக்கல் சீட்-பாலபாரதி சொல்வது 100% உண்மை.. நானே சாட்சி: ஜவாஹிருல்லா
Recommended Video
சென்னை: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காததால் ஜெயலலிதா பரிந்துரையில்தான் மெடிக்கல் சீட் கிடைத்தது என அமைச்சர் ஒருவர் சட்டசபையில் பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தெரிவித்தது உண்மை.. அதற்கு நானே சாட்சி என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மருத்துவர் கிருஷணசாமி அவர்கள் தனது மகளுக்கு தகுதிக்குரிய மதிப்பெண் இல்லை என்ற போதிலும் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பரிந்துரையால் மருத்துவ படிப்பிற்கான இடம் பெற்றார் என்று தோழர் பாலபாரதி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மரு.கிசாமிக்கு அடுத்த இருக்கையில் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த நான் பால பாரதி அவர்களின் அன்றைய சபை நிகழ்வு குறித்த பதிவிற்கு சாட்சி.
பாலபாரதியை பார்த்தது இல்லையா?
சென்ற 14வது சட்ட மன்றத்தில் முதல் வரிசையில் மரு. கிருஷ்ணசாமி அவரது வலதுபுறத்தில் நான் எனக்கு அடுத்து பாமக குரு அடுத்து காங்கிரஸ் கோபிநாத் அடுத்து தோழர்கள் குணசேகரன், ஆறுமுகம் அதற்கு அடுத்து 6வது இடத்தில் அமரும் தோழர் பாலபாரதியை பார்த்தேயில்லையாம் மரு. கிருஷ்ணசாமி!
காவி கண்ணாடி
என்னைப் போன்று விடுப்பு எடுக்காமல் சபைக்கு வந்து துடிப்புடன் மக்கள் பிரச்சனைகளை சபையில் எழுப்புபவர் தோழர் பாலபாரதி. அவரை பார்த்ததேயில்லை என்றுச் சொல்லும் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் தன் கண்ணாடியை காவி நிறமாக மாற்றிய பிறகு தான் மருத்தவர் ஆனதும் தன் பிள்ளைகள் மருத்துவர் ஆனதும் எப்படி என்பதும் மறந்து போகும்;
என்னையும் மறந்து போகும்
உழைக்கும் மக்களின் போராளி பாலபாரதியும் மறந்து போகும்; அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து நாள் தோறும் அவர் கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்வதற்கு வழிவிட்ட என்னையும் மறந்து போகும் என் நான் நினைக்கவில்லை. தனது தற்போதைய எஜமானர்களின் (பாஜக -ஆர்எஸ்எஸ்) குருநாதரான இட்லரின் கோயபல்ஸ் தத்துவமான - திட்டமிட்டு பொய்யை பரப்புதலை வாழ்வின் இலட்சியமாக கொண்டு தனது எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளார் மரு. கி.சாமி.
அந்தோ பரிதாபம்.
இவ்வாறு ஜவாஹிருலா பதிவிட்டுள்ளார்.
அந்த பொம்பளைய...
முன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, பாலபாரதியை அந்த பொம்பளைய சட்டசபையில் பார்த்தது இல்லை என கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இதற்கு பாலபாரதியும் ஃபேஸ்புக்கில் தக்க பதிலடி தந்துள்ளார்.