லோக்சபா தேர்தல் - நெல்லை அதிமுக தேர்தல் பொறுப்பாளர் முத்துக்கருப்பன்
சென்னை: நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கான அதிமுக லோக்சபா தேர்தல் பணிக்குழுத் தலைவராக முத்துக்கருப்பனை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக கடந்த 16.9.2013 அன்று நாடாளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
9.10.2013 அன்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முத்துக்கருப்பன் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குப் பொறுப்பாளராக, கூடுதலாக நியமிக்கப்படுகிறார்.
கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.