இலங்கையிலி்ருந்து 110 மீனவர்களையும் மீட்க நிச்சய நடவடிக்கை.. ஜெ. உறுதி
சென்னை: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்களையும் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் தனது அரசு எடுத்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். எனவே எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்போம் என்று மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்களக் கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், அடித்து விரட்டுவதும், துப்பாக்கியால் சுடுவதும் தொடர்கதையாகி விட்டது. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த 107 மீனவர்களையும், விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இது மீனவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அக்கிரமச் செயலைக் கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
நேற்று முன்தினம் முதல் நாகை தாலுகா பகுதியை சேர்ந்த நாகூர் மேலத்தெரு, நாகூர் ஆரியநாட்டுத் தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, கல்லார், நாகை ஆரியநாட்டுத் தெரு ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாகை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மீனவ சமுதாயப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசியது.
பின்னர் வெளியில் வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவ்ர்கள் விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். எனவே அவரது விளக்கத்திற்கு மதிப்பளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தனர்.