ஜெயலலிதா பிரதமராக டெல்லிக்கு போக முடியாது: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்
கிருஷ்ணகிரி: ஜெயலலிதா டெல்லிக்கு சுற்றிப்பார்க்க செல்லலாம். ஆனால், பிரதமராக முடியாது என தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்னப்பில்லப்பாவை ஆதரித்து அன்பழகன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: டெல்லியில் யார் ஆட்சி அமைப்பது என்பதற்கான தேர்தல்தான் தற்போது நடக்கிறது. இது தமிழ் நாட்டுக்கான தேர்தல் அல்ல. ஆனால் நம்முடைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இவர் பிரதமர் ஆவதற்கு அகில இந்திய அளவில் மக்கள் எதிர்பார்ப்பது போலவும், அவரை வலுக்கட்டாயமாக அவருடைய தொண்டர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறது போலவும் பேசி வருகிறார்.
இவர் நினைத்தால் டெல்லிக்கு போகலாம். போய் சுத்தி பார்த்துட்டு வரலாம். அவர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் டெல்லிக்கு போகலாம். ஆனால் பிரதமரெல்லாம் ஆகமுடியாது.
தி.மு.க. ஆட்சியில் கலைஞர் பல நல்ல திட்டங்ககளை அறிமுகப்படுத்தினார் விவசாயிகள் வாழ்வுக்காக 700 கோடி ரூபாய் விவசாயக்கடனை முற்றிலும் நீக்கினார். அதுபோல யாரும் தள்ளுபடி செய்தது இல்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வளிப்பதற்காகத்தான் இலவச வேட்டி சேலை திட்டத்தை கொண்டு வந்தோம். அந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஏழைகளும் பயன்பெற்றனர்.
ஆனால் இன்று அந்த திட்டத்திற்கு விலை மலிவு என்பதற்காக ஒரிசாவிலிருந்து துணிகளை கொள்முதல் செய்கிறார்கள். விலை மலிவாக இருக்கிறது துணியும் மலிவாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை இல்லை.
சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. தான் கொண்டு வந்தது. பாதி வேலைகள் நடைபெற்ற பிறகு இப்போது பா.ஜ.க.வினர்அதற்கு தடை செய்கிறார்கள். ஜெயலிதாவும், சேது சமுத்திர திட்டத்தை வேண்டாம் என்று சொல்கிறார்.
தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு அதிகரித்து விட்டது என்று சொல்லித்தான் ஆட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால் அன்றைக்கு 2 மணி நேரம் இருந்த மின்வெட்டு, இன்றைக்கு 10 மணி நேரமாக கூடியிருக்கிறது. இது போக பால் விலை, பஸ் கட்டணம் என்று எல்லாமே தி.மு.க. ஆட்சியை விட, இந்த ஆட்சியில் தான் அதிகரித்துள்ளது என்று கூறினார் அன்பழகன்.