விருத்தாச்சலத்தில் பலியான இரு அதிமுகவினரும் உடல் நலக்குறைவால் இறந்தனர்.. ஜெ. சொல்கிறார்!
சென்னை: விருத்தாச்சலத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது 2 அதிமுகவினர் பலியான சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். அதில் இருவரும் கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
விருத்தாச்சலத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 13 சட்டசபைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை ஆதரி்த்து அவர் பிரசாரம் செய்தார்.
அவர் பேசிய சமயம் சரியான வெயிலுடன் கூடிய பகலாகும். இதனால் கூட்டத்தில் அமர்ந்திருந்த பலருக்கும் மயக்கம் வந்து விட்டது. குறிப்பாக 15க்கும் மேற்பட்ட பெண்கள் வெயில் தாங்க முடியாமல் மயக்கமடைந்தனர். இந்த நிலையில் 2 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் வெயில் தாங்க முடியாமலும், நெருக்கடியில் சிக்கி பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத்தேர்தல், மே மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட, சிதம்பரம் நகர 31-வது வார்டைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு எஸ்.கருணாகரன் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும்; அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரத்தைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரர்கள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தற்போது, சட்டசபைப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.