ஜெ., களமிறக்கும் இலவச செல்போன், மானிய விலை ஸ்கூட்டி... இது உள்ளாட்சி தேர்தல் பட்ஜெட்
சென்னை: சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை கவுரவப் பிரச்சினையாக கருதுகிறழ ஆளும் அதிமுக. எனவேதான் 12 மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றவும், உள்ளாட்சி அமைப்புகளில் மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றவும் பல திட்டங்களை தீட்டி அதற்கான உத்தரவுகளை அமைச்சர்களுக்கு பிறப்பித்துள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பெண்களைக் கவரும் திட்டங்களான 50 சதவிகித மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்குவது, இலவச செல்போன் ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று கடந்த மே 23ம் தேதி ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவரோடு அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதற்கு 40 நாட்களுக்குப் பிறகு, கடந்த 6ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார்.
2016 -17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய இருப்பதால் முக்கிய அறிவிப்புகளைச் செய்ய வேண்டுமானால், அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும் என்பதால் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார் ஜெயலலிதா.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதிகாரிகள் துறைவாரியாக, கொள்கை - விளக்கக் குறிப்புகள் தயாரிப்பதில் பரபரப்பாக உள்ளனர்.
ஜெயலலிதா உத்தரவு
50 சதவிகித மானியத்தில் பெண்களுக்கு 50 சதவிகித மானிய விலையில் இருசக்கர வாகனம், விலையில்லாத செல்போன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாராம்.
அம்மா மோட்டல்
அதுபோல, தேசிய நெடுஞ்சாலைகளில், அம்மா ‘மோட்டல்' என்ற பெயரில் உணவகங்கள் ஏற்படுத்த வேண்டும். அங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளாராம்.
தேர்தல் வாக்குறுதி
தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைஃபை, 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசின் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறைகளில் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனராம் அதிகாரிகள்.
அரசுக்கு வரி வருவாய்
கடந்த வாரம் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசுக்கு வர வேண்டிய வருவாயில், எந்தக் குளறுபடிகளும் நேராமல் சரியாகச் செயல்பட்டால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும். அதற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்துங்கள் என உத்தரவிட்டாராம் முதல்வர் ஜெயலலிதா.
வாக்குறுதியை நிறைவேற்றனும்
இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே சாத்தியம். இல்லாவிட்டால், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துவிட நேரிடும் என முதல்வர் எண்ணுகிறார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான சிலவற்றை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பெண்களைக் கவரும் திட்டங்களை அறிவித்து அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர்.
செல்போன், ஸ்கூட்டி
உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு வாக்கையும் எப்படி கைப்பற்றுவது என்பதுதான் அதிமுகவின் இப்போதைய இலக்காக உள்ளது.
எனவேதான் வளர்ச்சிப் பணிகளுக்கான இலக்கு ரூ.1 லட்சம் கோடி என அமைச்சர்களுக்கு இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார் முதல்வர். இதனை சாத்தியப்படுத்தினாலே செல்போனும், இரு சக்கர வாகனமும் ஒவ்வொரு வீடுகளில் வலம் வர ஆரம்பித்துவிடும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.