இது உங்களுக்கே நல்லாருக்கா 'அம்மா'... மக்கள் இன்னும் நீரில் மிதக்க கட்சிக் கூட்டத்துக்கு புது ரோடு!
சென்னை: சென்னையில் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. ஆனால் நாளை நடக்கப் போகும் அதிமுக பொதுக் குழு செயற்குவுக் கூட்டங்களுக்காக தடபுடலாக இந்த அதிமுக அரசு செய்து வரும் வேலைகள் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
கிடப்பது கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனையில் வை கதையாக அதிமுக அரசு நடந்து வருவது மக்களை அதிர வைத்துள்ளது.
நீங்க எப்படியும் போங்க, எங்களுக்கு நாங்கதான் ரொம்ப முக்கியம் என்று மக்களைப் பார்த்து அதிமுக அரசு கூறுவது போல உள்ளது இந்த நடவடிக்கைகள்.
அதிமுக பொதுக்குழு
நாளை அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் திருவான்மியூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
புது ரோடு, புது டிரான்ஸ்பார்மர்
இந்த கூட்டத்துக்காக அதிமுக அரசு அடித்து வரும் கூத்துக்கள் மக்களை கொலைவெறி கொள்ள வைப்பதாக உள்ளது. புது ரோட்டு போட்டுள்ளனர் மின்னல் வேகத்தில். புது டிரான்ஸ்பார்மரும் பொருத்தியுள்ளனர். புது மின்சார கேபிளும் பொருத்தியுள்ளனர்.
வேகம் வேகமாக வெள்ளை அடிப்பு
அது மட்டுமா கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்லும் சாலை நெடுகிலும் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். பார்க்கவே பளிச்சென காணப்படுகிறது அந்தப் பகுதியே.
தடபுடல் அலங்கார வளைவு
தடபுடலான அலங்கார வளைவுகள், அண்ணா, எம்ஜிஆர் படங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மக்கள் இதை கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.
வெள்ள நிவாரணத்தில் வேகம் இல்லையே
அதிமுக அரசு தனது கட்சிக் கூட்டத்திற்காக செய்து வரும் இந்த அக்கப்போர்கள் மக்கள் மத்தியில் பெரும் குமுறலையே ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் மிதக்கும் பகுதிகள்
திருவிக நகர், திருநின்றவூர் பகுதிகளில் பல இன்னும் கூட நீரில் மிதக்கின்றன. பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. மக்கள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். வெள்ள மீட்பிலும், நிவாரணப் பணிகளிலும் இப்படி ஒரு வேகத்தை இந்த அரசு காட்டவில்லை என்பதே மக்களின் வேதனையாகும்.
மக்களை வேதனைக்குள்ளாகி தான் மட்டும் "மஜா" செய்து கொள்ள நினைப்பது எந்த ஊர் நியாயமோ தெரியவில்லை.!
அதிமுகவினரின் அடாவடி.. மக்கள் கொதிப்பு
இந்த நிலையில் அதிமுகவினர் செய்து வரும் அடாவடி ஏற்பாடுகளால் மக்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். காரணம் அதிமுகவினர் செய்து வரும் ஏற்பாடுகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வீட்டு வாசலை அடைத்து கட் அவுட், பேனர்கள்
சாலையின் இரு மருங்கிலும் பேனர்கள், தட்டிகள் என அதிமுகவினர் வைத்து வருகின்றனர். இதனால் பிளாட்பாரங்களில் மக்கள் கஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டு வாசலை அடைக்கும் வகையில், தட்டிகளை வைத்து வருகின்றனர்.
போக்குவரத்தும் பாதிப்பு
பெரிய பெரிய சைஸில் பேனர்களையும், தட்டிகளையும், தோரணங்களையும் வைத்துள்ளதால் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பொதுமக்களும் சிரமத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தேவையா இது?
சென்னை வெள்ளத்தால் மக்கள் இப்போதுதான் சற்று மீண்டு வந்துள்ளனர். இன்னும் கூட முழுமையாக மறையவில்லை சோகம். கிறிஸ்தவ மக்கள் கூட தங்களது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட்டம் இல்லாமல் அமைதியாக கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் அதிமுகவினர் மட்டும் ஆட்டம் போடுவது மக்களை கொதிப்படையவும், முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.