தமிழகத்தைச் சேர்ந்த பெண் பிரதமராக வேண்டும் என்பது இறைவனின் கட்டளை: மதுரை ஆதீனம்
திருப்பூர்: ஜெயலலிதா தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாகிவிட்டதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் திருப்பூர் அரிசிகடை வீதியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
பிரதமர்
நாட்டை காப்பாற்ற மேடையில் பிரச்சாரம் செய்து வருகிறேன். யாரை பிரதமராக்க வேண்டும் என்ற பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமராக வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக உள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா
உலகில் உள்ள துணிவுமிக்க பெண்களில் ஒருவர் ஜெயலலிதா. அவர் ஆற்றல்மிக்க, எழுச்சிமிக்க தலைவியாக உள்ளார்.
மின்வெட்டு
ஜெயலலிதா தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறார். தமிழகம் நிரந்தரமாக மின்வெட்டு இல்லா மாநிலமாக ஜெயலலிதா பிரதமராக வேண்டும். சாதி மத வேறுபாடில்லாத ஜெயலலிதா பிற மதத்தினரை மதிப்பவர்.
எனக்கும் அம்மா
ஜெயலலிதா உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் அவர் தான் அம்மா. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அவர் பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குகிறார். அவர் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அவரது ஜாதகம் அப்படி. அவர் சிம்ம ராசி, மக நட்சத்திரத்தில் பிறந்தவர். மகத்தில் பிறந்தவர் இகத்தை ஆள்வார்.
பேரன், பேத்தி
நீங்கள் செய்வீர்களா, செய்வீர்களா என்று அவர் நாலாபக்கமும் கேட்டு வருகிறார். அவருக்கு வாரிசு கிடையாது. நாம் தான் அவரது பேரன், பேத்தி. நமக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தான் அவர் வாழ்கிறார்.
மமதா
பட்நாயக், மாயாவதி, மமதா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஜெயலலிதாவிடம் நீங்கள் தான் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்று சொல்வார்கள். ஜெயலலிதா பிரதமர் ஆன பிறகு நதிகளை தேசியமயமாக்குவார், விலைவாசியை குறைப்பார், பெட்ரோல் விலையை குறைப்பார், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார். மீண்டும் நடக்கும் அதிமுக வெற்றி விழாவில் சந்திப்போம் என்றார் ஆதீனம்.