ஆர்.கே. நகர் அதிசயம்.. போட்டி மட்டுமே... ஓட்டுப் போட முடியாத ஜெயலலிதா, மகேந்திரன், டிராபிக்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா போட்டியிடு்ம் ஆர்.கே.நகரில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட ஜெயலலிதாவுக்கு இங்கு ஓட்டுரிமை கிடையாது.
ஜெயலிதாவின் பெயர் ஆயிரம் விளக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியிலும், மத்திய சென்னை தொகுதியிலும்தான் ஜெயலலிதாவால் வாக்களிக்க முடியும்.
அந்த வகையில் இன்றைய தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல இன்னொரு வேட்பாளரான டிராபிக் ராமசாமிக்கும் வேறு தொகுதியில் பெயர் உள்ளதால் அவரும் கூட இன்றைய இடைத் தேர்தலில் வாக்களிக்க இயலாது.
டிராபிக் ராமசாமியின் பெயர் தி.நகர் சட்டசபைத் தொகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனின் பெயரும் இந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரும் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரும் தி.நகர் சட்டசபைத் தொகுதியிலேயே உள்ளது.
மொத்தத்தில் ஜெயலிதா உள்பட 3 முக்கிய வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர். அதேசமயம், இவர்களுக்காக மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.