மோடியை விட ஜெயலலிதா தான் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்: தா. பாண்டியன்
இது குறித்து அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழாவில் பேசுகையில்,
இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரே விஷயம் மோடி தான். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மட்டுமே அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஒன்றும் பிரதமர் ஆகிவிடவில்லை.
அருணாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை என்றால் வேறு சில கட்சிகள் தான் வெற்றி பெற முடியுமே தவிர பாஜக வெற்றி பெறுவது நினைத்துக் கூட பார்க்க முடியாத கற்பனை கதை ஆகும். அப்படி இருக்கையில் மோடி எப்படி பிரதமராக முடியும்?
குஜராத் பல லட்சம் கோடி கடன் வாங்கிய மாநிலம் ஆகும். ஆனால் மோடியோ குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று கூறி வருகிறார். மேலும் ஊடகங்கள் அவரை பிரதமர் போன்று வர்ணிக்கின்றன.
வெறும் 2 மொழி (மோடிக்கு இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகள் தெரியும் என்று தா. பாண்டியனுக்கு தெரியாது போல) தெரிந்த ஒருவர் பிரதமர் ஆகலாம் எனில் 9 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய, நாட்டை திறமையாக நடத்தும் வல்லமை படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தான் பிரதமர் ஆகும் முழு தகுதியும் உள்ளது என்றார்.