'ஜார்ஜ் கோட்டை டிரைவரு'... நாகர்கோவிலில் மதுரை ஆதீனம் லகலக!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்துப் பிரசாரம் செயது பேசிய மதுரை ஆதீனம் மும்மதத்துப் பாடல்களைப் பாடியும், ஆங்கிலத்தில் அட்டகாசமாகப் பேசியும், கலகலக்க வைத்து வி்ட்டார் கூட்டத்தை.
அவரது பேச்சு முழுவதையும் ஜான் தங்கம் முதல் கூடியிருந்த கூட்டம் வரை சிரித்தபடியே ரசித்துக் கேட்டது. ஆனால் மதுரை ஆதீனம்தான் படு சீரியஸான முகத்துடன் முதல்வரை தாறுமாறாகப் புகழ்ந்து பேசி அசத்தி விட்டார்.
நாகர்கோவிலில் நடந்த இந்த கலகல பிரசாரக் கூட்டத்திலிருந்து சில துளிகள்....
பிரில்லியன்ட்.. பென்டாஸ்ட்டிக்...
தனது பேச்சின் இடையே முதல்வர் ஜெயலலிதாவின் திறமைகளைப் புகழ்ந்து பேசினார் ஆதீனம். அப்போது பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் நிறுத்தி நிதானமாக பிரில்லியன்ட்.. பென்டாஸ்டிக் என்று அவர் அழுத்தம் திருத்தமாக நாலைந்து பிட்டுகளை அள்ளிப் போட்டபோது கூட்டமே ஆர்ப்பரித்து அடங்கியது.
இறைவனிடம் கையேந்துங்கள்...
திடீரென அவர் சில பாட்டுக்களைப் பாடினார். தேவாரத்திலிருந்து ஒரு பாட்டு. கிறிஸ்தவப் பாட்டு ஒன்று மற்றும் பிரபலமான இஸ்லாமியப் பாடலான இறைவனிடம் கையேந்துங்கள என்று அசத்தி விட்டார் ஆதீனம்.
சரி நாகூர் ஹனீபாவை நினைச்சா திமுக ஞாபகம் வந்துடாதா..
இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை அவர் முதல் நாலு வரிகளை அழகாகப் பாடியபோது அனைவருக்கும் நாகூர் ஹனீபா ஞாபகம்தான் வந்து போனது. ஆதீனமும் கூட ஹனீபா மாதிரியேதான் கிட்டததட்டப் பாடினார். ஹனீபா ஞாபகம் வந்தால் திமுக ஞாபகம் மக்களுக்கு வராதா...
அம்மாதான் காப்பாத்தப் போறாங்க..
ஆதீனம் பேசுகையில், அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்த போறாங்க. அதுவும் இறைவன் கொடுத்த வரம், அதை நிறைவேற்ற சன்னிதானத்தை துணையிருக்க பிரசார களத்திற்கு செல்லும் அமைப்பையும் அதே இறைவன் அளித்திருக்கிறார்.
கெஞ்சிக் கேட்டுக்கறேன்..ப்ளீச்..
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, பயங்கரவாதத்தை ஒழித்திட, மக்கள் அமைதியாக வாழ்ந்திட அம்மாவின் அமைதி, வளம், வளர்ச்சி என்ற நோக்கம் நிறைவேறிட நீங்க செய்ய வேண்டியது இரட்டை இலைக்கு ஓட்டுபோடணும். உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்,
பேசாம பிரதமராக்கிடுங்க, அதான் நல்லது
இந்திய நாட்டை வல்லரசாக்க இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டு அம்மாவ பிரதமராக்கிடுங்க. அப்படி செய்தால் உங்களுக்கு அம்மா எல்லாவற்றையும் செய்து கொடுப்பார்.
இப்பவே கிரைண்டர் தருகிறார்..
முதல்வராக இருக்கும்போதே கிரைண்டர், மிக்சி, ஃபேன், லேப்டாப் தருகிறார். இலங்கை பிரச்னையில் ராஜபக்சேவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.
ஜார்ஜ் கோட்டை டிரைவரு..
மூன்று தடவை எம்.ஜி.ஆர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை ரயிலுக்கு டிரைவரா இருந்தாரு. அப்புறம் அம்மா இப்போது மூன்றாவது முறையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு டிரைவரா இருக்காங்க.
அடுத்து செங்கோட்டைக்கு டிரைவரு...
அடுத்து இப்ப அம்மா சென்னை டூ டெல்லி செங்கோட்டை ரயிலுக்கு டிரைவரா போக தயாராகிட்டாங்க. அவங்க கிளம்பனும்ன்னா, நீங்கதான் பச்சைக்கொடி காட்டணும்.
சிங்கம்ய்யா.. சிங்கிளாத்தாய்யா வரும்
அம்மா பன்மொழி ஆற்றல் மிக்கவர், 66 வயதிலும் சிங்கமாக நடக்கிறார். மத்த கட்சிக்காரங்க கேட்குறாங்க, 40 தொகுதியில அம்மா தனியா நிக்குறாங்கன்னு. அவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லுறேன், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.
ஜாதகம் சொல்லிருச்சு..
அம்மா பிரதமராவார்ன்னு, அவர் ஜாதகம் சொல்லுது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசிக்கு பிரதமராகனுங்கிறது அவர் ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை யாம் அறிவோம். அதனால்தான் நாடும், நாட்டு மக்களும் நலம் பெற்றிட வேண்டும் என்ற சமூக நோக்கத்துடன் ஆதீனமும் பிரசாரத்தில் இறங்கிவிட்டது என்று பேசிக் கொண்டே போனார் ஆதீனம்.
இவர் கிட்ட கத்துங்கப்பா...
உண்மையிலேயே ஆதீனத்தின் முழுப் பேச்சும் செம கலகல.. மக்கள் மனதில் பதியும் வகையில் பக்குவமாகப் பேசினார். பதமாகப் பேசினார். பிரசாரத்தில் குதித்துள்ள தலைவர்கள் சிலர் ஆதீனத்தின் பேச்சைப் பார்த்து நிறைய கத்துக்கிடலாம்.. கத்துக்குவீங்களா..... நீங்கள் கத்துக்குவீங்களா.. !?!