அம்மா குடிநீர் .. தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அம்மா குடிநீர் அறிமுகமாகியுள்ளது. இந்தத் திட்டம் மற்றும் குடிநீர் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பருப்பு, பாமாயில் திட்டம், அம்மா உணவகம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது அம்மா குடிநீரும் இணைகிறது.
இதேபோல மலிவு விலை காய்கறித் திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.
மாநகராட்சிகளில் அம்மா உணவகம்
தமிழக மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர்ச் சாதம், கரிவேப்பிலை சாதம் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
மலிவு விலை காய்கறிக் கடைகள்
அதேபோல காய்கறி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 ‘பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் அதாவது மலிவு விலை காய்கறி கடைகளையும் முதல்வர் தொடங்கி வைத்து அவையும் சிறப்பாக செயல்படுகின்றன.
அம்மா குடிநீர்
இந்த வரிசையில் தற்போது அம்மா குடிநீர் இணைகிறது. ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையங்களை அமைக்க கடந்த ஜூன் 21-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இன்று முதல் தொடக்கம்
அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு, விற்பனையும் அன்றைய தினமே தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் இத்திட்டம் தொடங்குகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதிச்சுமையை ஓரளவு குறைக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலமாக
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று அம்மா குடிநீர் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் இதைத் தொடங்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து
இந்தத் திட்டத்திற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் அம்மா குடிநீர் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
10 ரூபாய்க்கு ஒரு லிட்டர்
இந்த நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் குடிநீர் அம்மா குடிநீர் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
பஸ்கள்- பஸ் நிலையங்களில்
நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னை மாநகரில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.