துரோகங்கள் எத்தனை துரோகங்களடா: காங்.-திமுக துரோகங்களை பட்டியலிட்ட ஜெ.
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காங்கிரஸும், திமுகவும் தமிழகத்திற்கு செய்த துரோகங்களை முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மற்றும் திமுகவால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
கச்சத்தீவை மீட்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழகத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தது,
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் 2 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தது,
2007ல் வழங்கப்பட்ட காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் திட்டமிட்டே காலம் தாழ்த்தியது,
அம்மா மேற்கொண்ட பகீரத முயற்சிகளால் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு இருப்பது,
மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் வகுப்புவாரி வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது,
மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் குறைக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்த முனைவது,
தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடித்து விலைவாசி உயர வழிவகுத்தது,
விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை பலமுறை உயர்த்தியது,
மாநிலத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படும்போதெல்லாம் அதற்கு திமுக உறுதுணையாக இருந்தது,
சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் மருத்துவப்படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்க முனைவது,
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுப்பது,
ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டு களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு DAS அனுமதி வழங்க மறுப்பது,
தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருவது,
இலங்கை தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை நாட்டு ராணுவத்திற்கு பயிற்சியையும், ஆயுதங்களையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியபோது திமுக அதை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதித்தது,
இலங்கை இனப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அங்குள்ள இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது,
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைக்கு திமுக ஆதரவு அளித்தது,
மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றி தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது
என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு எண்ணற்ற துரோகங்களை, மக்கள் விரோதச் செயல்களை மத்திய காங்கிரஸ் அரசும், திமுகம் புரிந்திருக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.