சின்னச் சின்ன அடி எடுத்து சிகரம் தொட்ட நடிகை ஜெயலலிதா
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்த ஜெயலலிதா பிற்காலத்தில் கோலிவுட்டின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார்.
ஜெயலலிதா தனது தாயுடன் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து குழந்தை நட்சத்திரமானார். 16 வயதில் தாய் சந்தியாவுடன் பார்ட்டிக்கு போன இடத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
கன்னட திரையுலகில் இருந்து கோலிவுட் வந்த ஜெயலலிதாவை தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். தனது நடிப்பால், நடனத் திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் ஜெயலலிதா.
அவர் சிறந்த நடிகை மட்டும் அல்ல அருமையான நடனக் கலைஞரும் கூட. பரதம், மணிப்புரி, குச்சிப்புடி, கதக் ஆகிய நடன வகைகளை கற்றவர். பலவகை நடனங்கள் மட்டும் அல்ல பல மொழிகளிலும் பேசும் திறமைசாலி அவர்.
நடனமாடுவதோடு அவர் நன்றாக பாடவும் செய்வார். சூர்யகாந்தி உள்ளிட்ட சில படங்களில் பாடியிருக்கிறார் ஜெயலலிதா. திரையுலகில் தனது பன்முகத் திறமையால் ஜொலித்தவர் பிற்காலத்தில் தமிழகத்தின் முதல்வராகி இரும்புப் பெண்மணி என பெயர் எடுத்தார்.