"இந்தி மொழி" பற்றி பேசினால் "கனிமொழி" ஜாமீனில் வர முடியாது என மவுனமான கருணாநிதி: ஜெ. தாக்கு
சென்னை: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு ஆட்சிக் காலத்தில் பல்கலைக் கழகங்களில் இந்தியைத் திணிக்க முயன்ற போது, எங்கே "இந்தி மொழி" பற்றி பேசினால் "கனிமொழி" ஜாமீனில் வர முடியாது என மவுனமாக திமுக தலைவர் கருணாநிதி இருந்தார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அண்ணா, அழகப்பாவுக்கு மட்டும்
இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 16.9.2014 அன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தி கட்டாய அறிமுகம்
இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
2011 ல் தீர்மானம்
இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி 28.7.2011 அன்று எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது.
இந்தி மொழி- கனிமொழி
அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போது டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது, "இந்தி மொழி" பற்றி கூறினால் "கனிமொழி" ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது. இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
அதிமுக, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது.
1976 விதி சொல்வது என்ன?
1976 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் (மத்திய அரசின் அலுவலகப் பயன்பாடு) விதிகளின்படி, தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் "மண்டலம் சி" என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்குப் பொருந்தாது
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது.
சட்டத்துக்கே புறம்பானது
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.
கட்டுப்படுத்தாது
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும். 28.7.2011 அன்று நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது.
தலைமைச் செயலருக்கு உத்தரவு
அரசின் இந்த நிலைப்பாட்டை, பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.