மக்களுக்காகவா கட்சி நடத்துகிறார் விஜயகாந்த்.. போட்டுத் தாக்கும் மதுரை மேயர்
மதுரை: கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தனது கட்சிக்கு அங்கீகாரம் பெற்ற விஜயகாந்த் தற்போது கொள்கை இல்லாமல் பணம், பதவி, சீட்டுக்காக கட்சியை ஏலம் விடுகிறார். ஒவ்வொரு கட்சியாக அழைத்து கூட்டணி என்ற பெயரில் பேரம் பேசுகிறார். அவரெல்லாம் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை என்று மதுரை மேயர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரப் பணிக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 25 பேரை பணியில் அமர்த்துமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதில் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாராம்.
இந்த உத்தரவின்படி தற்போது தேர்தல் பணிகளுக்கான குழுக்களை அதிமுகவினர் அமைத்து வருகின்றனராம். மதுரையில் இதுதொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் புறநகர் மாவட்ட செயலாளரும், மதுரை மாநகராட்சி மேயருமான ராஜன் செல்லப்பா கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வருகிற சட்டசபைத் தேர்தலுக்காக தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் "அம்மா" ஒரு வாக்குச்சாவடிக்கு 25 பேர் வீதம் நியமிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். அதுவும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆகவே ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 5 பெண்கள், 5 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அதிமுகக. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி எழுதப்பட்ட ஒன்றாகும். இதே வேளையில் நாம் ஓட்டு சேகரிப்பதற்கு எதற்காக என்றால் எதிர் அணியினர் டெபாசிட் இழக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தனது கட்சிக்கு அங்கீகாரம் பெற்ற விஜயகாந்த் தற்போது கொள்கை இல்லாமல் பணம், பதவி, சீட்டுக்காக கட்சியை ஏலம் விடுகிறார். ஒவ்வொரு கட்சியாக அழைத்து கூட்டணி என்ற பெயரில் பேரம் பேசுகிறார். அவரெல்லாம் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் "அம்மா" வெற்றி பெற்றது போல வருகின்ற சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் "அம்மா" முதல்வராக அரியணை ஏறுவார் என்றார் அவர்.